ஓசூர்:
ஓசூரில் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் போட்டிகளை நடத்தவந்த உதயநிதிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மாவட்டந்தோறும் இளைஞரணியினர் சார்பில் பேச்சுப் போட்டி, கட்டுரை ஒப்புவித்தல் போட்டி, ஓவிய போட்டிகள் உள்ளிட்டவை நடத்தி வெற்றி பெற்றோருக்கு மாநில அளவில் இறுதிப்போட்டிகளை மாநில இளைஞரணி செயலாளர், திமுக தலைவர் முன்னிலையில் நடத்துவது வழக்கம்.
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டு நடத்தப்படும் முதல் அண்ணா பிறந்தநாள் விழா போட்டி என்பதாலும் அண்ணாவின் 111வது பிறந்தநாள் போட்டி ஓசூரில் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்திருத்த நிலையில் திமுகவினர் கடந்த ஒருவாரமாகவே அதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று மற்றும் நாளை நடைப்பெறும் அண்ணா பிறந்தநாள் இறுதிப்போட்டிகளில் பங்கேற்க திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஓசூருக்கு வருகை தந்துள்ளார். அவரை தமிழக மாநில எல்லையான ஜுஜுவாடி என்னுமிடத்தில் திமுகவினர் பட்டாசுக்களை வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
போட்டிகளில் வெற்றிப்பெற்றோருக்கு நாளை பரிசுகள் வழங்கப்பட இருப்பதால், இறுதிப்போட்டிக்கள் ஓசூர் தனியார் மண்டபத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்தபோட்டிகளில் உதயநிதி நாளை பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.