சென்னை:
நடிகர் சங்க நிலம் விற்பனை தொடர்பான வழக்கில், நடிகர் விஷால் காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசில் இன்று நேரில் ஆஜரானார்.
சென்னை கூடுவாஞ்சேரி அருகே உள்ள கிராமத்தில், நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை, சங்க பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதீல் பெறாமல் முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் முறைகேடாக விற்பனை செய்துள்ளதாக நடிகர் சங்க தலைவர் விஷால் காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கூறினார்.
கடந்த ஜூன் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து சரத்குமார் மற்றும் ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்களை விஷால், குற்றப்பிரிவு போலீசில் இன்று நேரில் தாக்கல் செய்தார். அவரிடம் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் தென்னரசு விசாரணை நடத்தினார்.