அதிமுகவிலிருந்து தங்கதமிழ் செல்வன் பிரிந்து டிடிவி தினகரன் அணிக்கு சென்றார். அவருடன் 18 எம்.எல்.ஏ.க்களும் உடன் சென்றனர்.
அனைவரும் தங்களது பதவியை இழந்து தற்போது நடுத்தெருவில் நிற்கின்றனர். அதே போன்று தங்கதமிழ் செல்வனும் பதவியின்றி தற்போது தவித்து வருகிறார்.
இரட்டை இலை சின்னம், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க மேல் முறையீடு வழக்குகளில் டிடிவி தினகரன் அணிக்கு வெற்றி கிடைக்காத நிலையில், அக்கட்சிக்குள்ளே குழப்பம் ஏற்பட்டது.
அமமுகல் இருந்து பலரும் வெளியேறி அதிமுக மற்றும் திமுகவில் சேர்ந்து விட்டனர். இந்நிலையில்தான், தன்னுடைய செல்வாக்கை நிரூபித்து, அதிமுகவை கைப்பற்றி விடலாம் என்ற நோக்கத்துடன் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 21 தொகுதிக்களுக்கு இடைத்தேர்தலை சந்தித்தார் தினகரன்.
ஆனால் நின்ற அனைத்து தொகுதியிலும் டெபாசிட் பறிபோனது. அதே போன்று தேனி பாராளுமன்ற தொகுதியில் நின்ற தங்கதமிழ் செல்வனும் படுதோல்வியை சந்தித்தார்.
இந்த தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் தங்கதமிழ் செல்வன் அமமுகவிலிருந்து விலக தலைமையை விமர்சிக்க தொடங்கினார்.
அதிமுக மீதான தன்னுடைய எதிர்ப்பு மனநிலையை மாற்றிக்கொண்டு அதிமுகவில் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்து முக்கிய அமைச்சர்களுக்கு தூது அனுப்பி பேசியதாக கூறப்படுகிறது.
ஆனால் அவரின் வருகையை ஓ.பன்னீர்செல்வம் விரும்பவில்லை. இதற்கு வலுசேர்க்கும் விதமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தங்கதமிழ் செல்வனுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் கட்சிக்கு துரோகம் செய்தவரை மீண்டும் சேர்க்க கூடாது என்ற வாசகம் அடங்கியுள்ளது. இந்த போஸ்டர்களால் அதிமுகவினரிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.