பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு… டாஸ்மாக்கை தொடர்ந்து அரசு பேருந்துகளை இயக்க முடிவு..!

பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு… டாஸ்மாக்கை தொடர்ந்து அரசு பேருந்துகளை இயக்க முடிவு..!

ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்க வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மே 17 உடன் ஊரடங்கு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு காரணமாக மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் பேருந்து போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில், ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்;- ஓட்டுநர், நடத்துனர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட வேண்டும். மேலும், போக்குவரத்து ஊழியர்களுக்கு முக கவசம், கையுறை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். பயணிகளிடையே இருக்கையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதிக்க வேண்டும். வரிசையில் நின்று பேருந்தில் ஏற வேண்டும். பேருந்தின் பின்பக்க வாயிலில் பயணிகள் ஏறவும், முன்பக்க வாயிலில் இறங்கவும் நடவடிக்கை தேவை எனவும் கூறினார். மேலும், கூகுள் பே போன்ற செயலிகள் மூலம் ஆன்லைனில் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்