சித்த மருத்துவத்தால் 5 நாட்களில் குணமடையும் கரோனா நோயாளிகள்: அனைத்து மையங்களுக்கும் சிகிச்சையை விரிவுபடுத்த அரசு முடிவு

சித்த மருத்துவத்தால் 5 நாட்களில் குணமடையும் கரோனா நோயாளிகள்: அனைத்து மையங்களுக்கும் சிகிச்சையை விரிவுபடுத்த அரசு முடிவு

சித்த மருத்துவ சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகள் 5 நாட்களில் குணமடைந்து விடுகின்றனர். அதனால் அனைத்து கரோனா சிகிச்சைமையங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை முறையை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 17-ம் தேதி நிலவரப்படி சென்னையில் மொத்தம் 35 ஆயிரத்து 565 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட 50 ஆயிரத்து 193 பேரில், சென்னையில் மட்டும் 71 சதவீதம் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை 19 ஆயிரத்து 27 பேர் குணமடைந்துள்ளனர். 16 ஆயிரத்து 67 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களில் பாதிப்பு அதிகமாக உள்ளவர்கள் 3 அரசு மருத்துவமனைகள் மற்றும் அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான அறிகுறி மற்றும் அறிகுறி இல்லாத, ஆனால் கரோனா தொற்று உள்ளவர்கள், மாநகராட்சி சார்பில் 18 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அலோபதி மருத்துவ கிசிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே மாநகராட்சி சார்பில் வளசரவாக்கத்தில் இயங்கி வரும் சிகிச்சை மையம் மற்றும் புழல் சிறையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில்சித்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் 7 நாட்களுக்குள்ளாகவே அனைவரும் குணமடைந்துள்ளனர். அவ்வாறு இதுவரை 183 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் இயங்கிவரும் அனைத்து கரோனா சிகிச்சை மையங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கலாம் என தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநர் ஆர்.மீனாகுமாரி கூறியதாவது:

கரோனாவுக்கு வழங்கப்படும் சித்த மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் அனைத்தும் உள்ளூரிலேயே கிடைக்கக்கூடியது என்பதால், தட்டுப்பாடின்றி மலிவாக கிடைக்கும். இந்த சிகிச்சை மூலம்கரோனா நோயாளிகள் 5 முதல்7 நாட்களுக்குள் குணமாகிவிடுகின்றனர். அதனால் சென்னையில் உள்ள அனைத்து கரோனா சிகிச்சை மையங்களிலும் ஏற்கெனவே சித்த மருந்துகள் வழங்கப்பட்டு வந்தாலும், கூடுதலாக சில சித்த மருந்துகளை வழங்கி சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க அரசுக்கு தெரிவித்திருக்கிறோம்.

அது தொடர்பான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. அதில் கரோனா நோயாளிகள் அனைவருக்கும் சித்த மருத்துவ கிசிச்சை அளிப்பது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது எத்தகைய சித்த மருந்துகளை வழங்கலாம் எனவும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்