புதுடெல்லி:
குடிசை வீடு மற்றும் சைக்கிள் மட்டுமே சொத்து மதிப்பாக வைத்துள்ள பிரதாப் சந்திர சாரங்கி இணையமைச்சரானார்.
குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று நடந்த விழாவில், நாட்டின் 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மொத்தம் 58 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி உள்ளிட்ட 25 பேர் கேபினட்டில் இடம்பெற்றுள்ளனர். 9 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஒடிசாவை சேர்ந்த பிரதாப் சந்திர சாரங்கிக்கு இணை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. பாலசோர் தொகுதியில் பிஜு ஜனதா தள வேட்பாளரை தோற்கடித்தவர். இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல், சமூக சிந்தனை உள்ளவராவார்.
இளவயதிலிருந்தே பழங்குடி இனத்தவர்கள் தங்கியுள்ள கிராமங்களில் சமூக விழிப்புணர்வு சேவையில் ஈடுபட்டு வந்தார். தன் தாயுடன் சிறிய குடிசை வீட்டில் தங்கியும், சைக்கிளில் மட்டுமே பயணம் செய்து வந்தவர். எம்.பி., ஆன பிறகும் அவர் சைக்கிளில் செல்வதை மாற்றிக்கொள்ளவில்லை. இவரின் சொத்து குடிசையும் சைக்கிளும் மட்டுமே.