ஒசூர்:
ஒசூர் பெயிண்டர் மகன் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு 20 லட்சத்துக்கு சன்ரைஸ் ஹைதராபாத் அணியினர் ஏலம் எடுத்துள்ளனர்.
ஒசூரை சேர்ந்த பெயிண்டர் மகன் சஞ்சய்யாதவ் என்பவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு சன்ரைஸ் ஹைதராபாத் அணியால் 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
ஒசூரை சேர்ந்தவர் பெயிண்டர் ராம்சிங்யாதவ் இவரது மனைவி மாயாதேவி இவர்களுக்கு சஞ்சய்யாதவ், சோனுயாதவ் ஆகிய இருமகன்கள் உள்ளனர். இருவரும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள். சஞ்சய்யாதவ் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் திருவள்ளுவர் வீரன்ஸ் அணியில் விளையாடினார். இதில் அவர் மொத்தம் 150 ரன்களை எடுத்து சிறப்பாக ஆடியுள்ளார்.
அதேபோல கடந்த 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற 20-20 போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையாடும் போது கேரள அணிக்கு எதிரான போட்டியில் முக்கிய கட்டத்தில் 11 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவியுள்ளார். இதன் மூலம் இவருக்கு ஐபிஎல் கிரிக்கெட் வாய்ப்பு தேடி வந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் சஞ்சய்யாதவை 10 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர். அப்போதும் இவர் திறமையாக விளையாடினார்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக சிறந்த வீரர்களை ஏலம் எடுக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஒசூரை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சஞ்சய்யாதவை சன்ரைஸ் ஹைதராபாத் அணியினர் ஐபிஎல் போட்டியில் விளையாட 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளனர். விரைவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற உள்ள சஞ்சக்கு வாழ்த்து தெரிவித்து அவரது பயிற்சியாளர் பிரேம் மற்றும் நன்பர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.