தற்கொலை செய்த காபி டே சித்தார்த் உடல் மீட்பு

தற்கொலை செய்த காபி டே சித்தார்த் உடல் மீட்பு

பெங்களூரு:

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த் ஆவார், இவர் சிக்கமகளூருவை சேர்ந்த தொழில் அதிபர்.

இவர் உலகம் முழுவதும் ‘காபி டே’ எனும் பிரபலமான தேநீர் ஓட்டல் மற்றும் பல்வேறு நிறுவனங்களையும் நடத்திவந்தார்.

எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சில நாட்களிலேயே சித்தார்த்துக்கு சொந்தமான நிறுவனங்கள், காபி டே ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சித்தார்த் தனது காரில் பெங்களூருவில் இருந்து சிக்கமகளூருவுக்கு சென்றார்.

காரை டிரைவர் பசவராஜ் ஓட்டினார். சக்லேஷ்புரா அருகே சென்றபோது டிரைவரிடம், மங்களூருவுக்கு செல்லும்படி சித்தார்த் கூறினார். அதன்படி டிரைவர் காரை மங்களூருவுக்கு ஓட்டிச் சென்றார்.

இரவு 7.15 மணிக்கு மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றுப்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று காரை நிறுத்த சொல்லியுள்ளார்.

காரில் இருந்து இறங்கிய சித்தார்த் தனது செல்போனில் யாருடனோ பேசியபடி நடந்து சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் கார் இருக்கும் இடத்திற்கு வந்து சேரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பசவராஜ், சித்தார்த்தின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பசவராஜ், சித்தார்த் மாயமாகிவிட்டதாக கூறி கங்கனாடி டவுன் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீஸ் கமிஷனர் அனுமந்தராயா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

சித்தார்த் ஆற்றில் குதித்து இருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் நேத்ராவதி ஆற்றில் இரவு முழுவதும் போலீசார் தேடிப்பார்த்தனர்.

நீண்ட நேரமாக தேடியும் சித்தார்த் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனிடையே சித்தார்த் மாயமான விஷயம் கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி அறிந்த எஸ்.எம்.கிருஷ்ணாவும், அவருடைய குடும்பத்தினரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

மேலும், சித்தார்த்தை யாராவது கடத்திச்சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வந்தனர்.

சித்தார்த்தின் கார் டிரைவரிடமும் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேத்ரா ஆற்றில் இருந்து இன்று அதிகாலை சித்தாத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பெரும் நிதிச் சுமையில் ‘காபி டே’ நிறுவனம் சிக்கித் தவிப்பதாகவும் அந்த மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்