சென்னை:
கேரளாவில் மாணவர் ஒருவருக்கு ‘நிபா’ வைரஸ் பாதிப்புக்குள்ளானதையடுத்து, கேரள எல்லையோரப்பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கேரள மாநிலம், கொச்சையை சேர்ந்த கல்லூரி மாணவர் ‘நிபா’ வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக, அவரிடம் இருந்து ரத்த மாதிரியை எடுத்து புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த பரிசோதனையில், கல்லூரி மாணவருக்கு ‘நிபா’ வைரசால் பதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது என கேரள சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.
‘நிபா’ வைரசை சமாளிக்க மாநில சுகாதாரத்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாகவும், மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், கேரளாவை ஒட்டிய எல்லையோர மாவட்டங்களில் ‘நிபா’ காய்ச்சல் பரவுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இதனால் மக்கள் அச்சப்படத்தேவையில்லை என தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.