பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று ராஜ்யசபா எம்.பி. தேர்தல்.. இன்றே முடிவுகள் வெளியாகும்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று ராஜ்யசபா எம்.பி. தேர்தல்.. இன்றே முடிவுகள் வெளியாகும்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 19 இடங்கள் காலியாக உள்ளன. இதில் ஆந்திர பிரேதம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு தலா 4 இடங்களும், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்துக்கு தலா 3 இடங்களும், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு 2 இடங்களும், மிசோரம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு தலா ஒரு மாநிலங்களவை இடமும் அடங்கும். காலியாக உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை (ராஜ்யசபா) இடங்களுக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதமே நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய லாக்டவுனால் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. இந்நிலையில், கடந்த 5ம் தேதியன்று தேர்தல் ஆணையம் காலியாக உள்ள 19 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் இம்மாதம் 19ம் தேதி நடைபெறும் என அறிவித்தது.இதனையடுத்து குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறுவது, குதிரை பேரம், எம்.எல்.ஏ.க்கள் ரிசார்ட்டில் தங்கவைப்பு என ராஜ்யசபா தேர்தல் நிலவரம் பரபரப்பாக இருந்தது. மேலும் மணிப்பூரில் நேற்று நடந்த பல எதிர்பாராத அரசியல் திருப்பங்களால் ராஜ்யசபா தேர்தலுக்கான வாக்கெடுப்பு சமன்பாட்டில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று தேர்தல் ஆணையம் திட்டமிட்டப்படி மாநிலங்களவையில் காலியாக உள்ள 19 இடங்களுக்கான தேர்தலை நடத்துகிறது. கொரோனா வைரஸ் பரவலை மனதில் கொண்டு தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் கூறுகையில், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும், அவர்கள் மாஸ்க் அணிய வேண்டும், சமூக விலகல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் காய்ச்சல் அல்லது பிற அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் தனி காத்திருப்பு அறையில் வைக்கப்படுவர். இன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்