கொரோனா: தற்காப்பு நடவடிக்கைகளில் புதுமை! – அசத்தும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா

தமிழக அமைச்சர்களில் கே.பி. அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜு ஆகிய மூன்று அமைச்சரகள் தற்போது கொரோனா சிகிச்சையில் இருக்கிறார்கள். அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏ-கள் கொரோனா பாஸிட்டிவ் ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள். சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். அவரது மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான பொது நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்துகொள்கிறார். அதிகாரிகள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரையும் தினந்தோறும் சந்தித்து வருகிறார்.ஏற்கனவே கேரளாவில் காரில் முன் சீட்டுக்கும் பின் சீட்டுக்கும் இடையில் தடுப்பு இருக்கவேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கோவை ஏரியாவில் கால் டாக்ஸி நிறுவனத்தில் ஒடும் கார்களில் இதே ஏற்பாடுகளை செய்துள்ளனர். அமைச்சர் சரோஜா அதே ஃபார்முலாவைக் கையில் எடுத்து, முன்பக்க இரண்டு சீட்டுகளுக்கு தனித்தனியாகவும், பின் பக்க இரண்டு சீட்டுகளுக்கு தனித்தனியாகவும்..ஆக, நாலு தடுப்புகளாக சீட்டுக்களை பிரித்து தடுப்புகளை அமைத்திருக்கிறார். அமைச்சர், காரில் பயணிக்கும்போது பெரும்பாலும் ஏசி போடுவதில்லை. தேவைப்பட்டால் மட்டுமே ஏசியை பயன்படுத்தி வருகிறார்

அரசு மருத்துவமனையில் 22 வருடங்கள் மகப்பேறு மருத்துவராக பணிபுரிந்த அனுபவம் உள்ளவர் அமைச்சர் சரோஜா. அவரது கணவர் டாக்டர் ரஞ்சன், மயக்கவியல் மருத்துவர். அரசு மருத்துவமனையில் 20 வருடங்கள் பணிபுரிந்து விருப்ப ஒய்வில் வந்தவர். இந்த இருவரும் மருத்துவர் என்பதால், கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த மாவட்ட அதிகாரிகளுடன் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கொரோனா சிகிச்சையில் உள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களின் டிரைவர்கள், உதவியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரான தங்கமணியின் கார் டிரைவர் மூலம் வைரஸ் தொற்று பரவ.. முதலில் பாதிக்கப்பட்டவர் தங்கமணியின் மகன் தரணி. இவர் மூலம் தங்கமணிக்கும் பரவியது. இருவரும் தற்போது சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அதையடுத்து, அமைச்சர் சரோஜா, தனக்கும் கொரோனா தொற்று பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வருகிறார்.அமைச்சர் சரோஜா
அவரது காரில் ஒட்டுனர் மற்றும் பின் இருக்கையில் இருப்பவர்கள் யாருடனும் தொடர்பு இல்லாத வகையில் கனமான கவரால் தடுப்பு அமைத்துள்ளார். அமைச்சர் சரோஜாவிடம் பேசினோம்…

“அரசு வெளியிடும் தினசரி கொரோனா புள்ளிவிவரங்களை பார்த்தால், எங்கள் மாவட்டம்தான் மிகக்குறைவானதாக இருக்கிறது. இதற்குக் காரணம்.. மாவட்ட அமைச்சர் தங்கமணி, கலெக்டர், எஸ்.பி., மருத்துவத்துறை உயர் அதிகாரிகள். இவர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுதான். முதல்வர் சொல்கிறபடி, மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளைச் சுத்தம் செய்வது. இதையெல்லாம் நானும் செய்கிறேன். அடிக்கடி கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொள்வதுண்டு. தினமும் நான் சந்திக்கும் மக்களிடமும் கொரோனா விழிப்பு உணர்வை உண்டாக்கி வருகிறேன். நல்ல பலன் கிடைத்துள்ளது. எனது காரில் சோதனை அடிப்படையில் சில ஏற்பாடுகளை செய்துள்ளேன். அவ்வளவுதான்” என்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்