சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நடைபெற்று வருகிற அ.தி.மு.க. அரசு மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தால் எதிர்பார்த்த முதலீடுகள் வரவில்லை.
தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று தொழிலதிபர்களை அழைத்து பேசி, அதிக முதலீடுகளை பெறப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது என்ன பலனை கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நீலகிரி மாவட்டமே வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதனை கண்டவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறச் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தரக்குறைவான விமர்சனத்தை எடப்பாடி செய்திருக்கிறார்.
இது மிகுந்த கண்டனத்துக்குரியது. தமிழகத்திற்கு முதலீடுகளை பெறுவதிலோ, தொழில் வளர்ச்சியை பெருக்குவதிலோ, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்வதிலோ தமிழக அரசு பெரும் தோல்வியடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.