சென்னை:
நிலவிற்கு சந்திராயன் 2 திட்டத்தில் ஏற்பட்டது தோல்விக்கு சமமான ஒன்றல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சரியாக சேர்ந்த சந்திராயன் 2 விக்ரம் லேண்டர் விண்கலம், இன்று அதிகாலை 1.30 மணியளவில் நிலவில் தரையிறங்குவதென திட்டமிடப்பட்டிருந்தது.
நிலவை நோக்கி பயணித்தது லேண்டர். தரையிறங்க 2.1 கி.மீ தொலைவே இருந்தபோது அதிலிருந்து சிக்னல் துண்டிக்கப்பட்டது.
இதனை இஸ்ரோ தலைவர் சிவன் மெல்லிய குரலில் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இது பின்னடைவு நமக்கு நிரந்தமானது அல்ல என்றார்.
மேலும், நிலவைத் தொடும் இந்தியாவின் முயற்சி நிச்சயமாக வெற்றிபெறும் என்று கூறினார்.
இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சந்திராயன் 2 திட்டத்தில் ஏற்பட்டது தோல்விக்கு சமமான ஒன்றல்ல. ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பான முன்னேற்றத்தில் விலைமதிப்பற்றக் கற்றலுக்கான தருணம் இது.
நாம் விரைவில் நிலவில் இருப்போம். இஸ்ரோவுக்கு நன்றி. இந்த நாடு உங்களை நம்புகிறது. பாராட்டுகிறது. என்று குறிப்பிட்டிருந்தார்.