புதுடெல்லி:
காஷ்மீர் விவகாரத்தில் உதவும்படி அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கேட்கவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமருடன் நடந்த சந்திப்பில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில், காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண மத்தியஸ்தம் செய்ய விரும்புகிறீர்களா என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கேட்டதாக கூறியிருந்தார். இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்திருந்தது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில்,காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண இரு நாடுகளுக்கும் உதவ வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம் என்றும், மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்பது அல்ல என தெரிவித்திருந்தது.
இந்த பிரச்சனை நாடாளுமன்றம் இன்று கூடியதும் பூதாகரமாக வெடித்தது. இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் இதற்கான விளக்கத்தை அளித்தார். அதில் காஷ்மீர் விவகாரத்தில் உதவும்படி அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பிரதமர் மோடி கேட்கவில்லை என தெரிவித்தார். இந்தியா பாகிஸ்தான் இடையேயான பிரச்னையை இரு நாடுகளுக்குள்ளேயே பேசி தீர்க்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.