தாளவாடி:
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதே போன்று ஈரோடு மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
சத்தியமங்கலம் வனப்பகுதியான காளி திம்பம், தலமலை வழியாக தாளவாடி செல்லும் மலைப்பாதையில் நள்ளிரவு 11 மணியிலிருந்து 1 மணி வரைக்கும் பலத்த மழை பெய்துள்ளது.
நெய்தாளபுரம், கோடிபுரம், அரேப்பாளையம் ஆகிய வனப்பகுதிகளில் பெய்த கனமழையால் அந்த பகுதிகளில் உள்ள கால்வாய்களில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றுள்ளது.
தாளவாடி செல்லும் ரோட்டில் சிக்கள்ளி என்ற இடத்தில் உள்ள தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தால் மூழ்கியது.
இதனால் நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் போக முடியாமல் திரும்பி சென்றனர்.
காலை 9 மணியளவில் நீர் சற்று குறைந்த பின்னர் போக்குவரத்து மீண்டும் துவங்கியது.