சென்னை:
மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவியேற்புக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனு செய்திருந்தது.
திமுவின் முறையீட்டை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, பதவியேற்பை தடுக்க முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, அவசர வழக்காக விசாரிக்க முடியாது என தெரிவித்தார்.
மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, தேர்தல் வழக்காக, சம்பந்தப்பட்ட நீதிபதி முன் வழக்குத் தொடரலாம் என்றார். இதையடுத்து நீதிபதி ஆதிகேசவலு முன் முறையிடப்பட்டது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில், பாமக பெற்ற இடங்களை இணையதளத்தில் வெளியிட, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, பாமக சார்பில் தாக்கல் செய்த மனு, நாளை விசாரிக்கப்படும் என நீதிபதி ஆதிகேசவலு கூறியுள்ளார்.