தேன்கனிக்கோட்டை அருகே நோயுடன் போராடிய பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டை அருகே நோயுடன் போராடிய பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் நொகனூர் வனப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்தன. இந்த நிலையில் நொகனூரை அடுத்துள்ள ஆலள்ளி காப்புக்காட்டில் 15 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று நோய்வாய்ப்பட்டு அந்த பகுதியில் சுருண்டு விழுந்து கிடந்தது.

இதுகுறித்து பொதுமக்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு நேற்று தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் நோயுடன் போராடிய அந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் யானையின் உடல் நலத்தில் முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து 30-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டு அந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர்.இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை 6 மணி அளவில் அந்த பெண் யானை இறந்தது . இதையடுத்து வனத்துறை கால்நடை டாக்டர்கள் மூலம் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது யானையின் வயிற்றுக்குள் குட்டி யானை ஒன்று இறந்த நிலையில் இருந்தது. இன்னும் ஓரிரு மாதத்தில் குட்டியை ஈன இருந்த நிலையில் யானை நோயால் இறந்ததும், வயிற்றுக்குள் இருந்த குட்டி யானையும் சேர்ந்து இறந்து இருப்பதும் தெரியவந்தது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்