நாடுமுழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலின் போது பல்வேறு சர்ச்சைகளுக்கு உண்டான நிலையில், சில தொகுதிகளில் மறுவாக்குப்பதிவும் நடைபெற்றது.
மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வுக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் பிரச்சாரக்கூட்டத்தில் கலவரம், கல்வீச்சு, சிலை உடைப்பு போன்றவைகள் நடந்தன.
தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோட்சே பற்றிய சர்ச்சை கருத்துக்கு நாடுமுழுவதும் பெரும் தலைவர்களின் கண்டனத்துக்குள்ளானார்.
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை தனியார் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பா.ஜ., கூட்டணி 306 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 132 தொகுதிகளிலும் மற்றவை 104 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
என்டிடிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், பா.ஜ., கூட்டணி 300 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 127 தொகுதிகளிலும் மற்றவை 115 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சி.வோட்டர்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், பா.ஜ., கூட்டணி 287 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 128 தொகுதிகளிலும் மற்றவை 127 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.