சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அதிமுக தொடங்கியுள்ள நிலையில், நிர்வாகிகள் நியமனம், சசிகலா விடுதலை, முதல்வர் வேட்பாளர்குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர்இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை அதிமுக ஏற்கெனவே தொடங்கியுள்ளது. நிர்வாக ரீதியாக மாவட்டங்கள் பிரிப்பு, புதிய நிர்வாகிகள் நியமனம், பல்வேறு பிரிவுகளுக்கு உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசின் நடவடிக்கைகள், திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடையும் வகையில் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சீரமைக்கப்பட்டு, நிர்வாகிகள் மற்றும் கீழ்மட்ட பிரதிநிதிகள் வரை நியமிக்கப்பட்டுள்ளனர்.