திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே உள்ள மோட்டூரை சேர்ந்தவர் தனபாக்கியம் 63, இன்று காலை ரேசன் பொருட்கள் வாங்க இனாம்காரியாந்தல் பகுதியில் உள்ள ரேசன் கடைக்கு சென்றார்.
இந்த கடை வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் திறக்கப்படுவதால் கூட்டம் அதிகளவில் இருக்கும்.
எனவே தனபாக்கியம் கடை திறப்பதற்கு முன்பாகவே அங்கு சென்று காத்திருந்தார். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகளவில் சேர்ந்தது.
ரேசன் கடை ஊழியர்கள் கடையை திறந்ததும் பொதுமக்கள் பொருட்களை வாங்க முண்டியடித்து சென்றனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய தனபாக்கியம் மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது பற்றி திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டி உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.