கரோனா தடுப்பு ஊசியை அதிகஅளவில் கொள்முதல் செய்கிறது யுனிசெஃப்

  • In General
  • September 8, 2020
  • 160 Views
கரோனா தடுப்பு ஊசியை அதிகஅளவில் கொள்முதல் செய்கிறது யுனிசெஃப்

கரோனா தொற்றுக்கான தடுப்பு ஊசியை அதிக அளவில் கொள்முதல் செய்து உலக நாடுகளுக்கு விநியோகிக்கும் பணியை ஐ.நா. குழந்தைகளுக்கான நிதி அமைப்பு (யுனிசெஃப்) மேற்கொள்ளவுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு எதிராகத் தடுப்பு ஊசியைத் தயாரிக்கும் பணியில் பல நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். அஸ்த்ரா ஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்ஃபோா்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள தடுப்பு ஊசி, முதல்கட்டப் பரிசோதனையில் சிறந்த முடிவுகளைத் தந்தது.

அந்த மருந்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பரிசோதனைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கரோனா தொற்றுக்கு எதிரான பல்வேறு தடுப்பு ஊசிகள் வெவ்வேறு கட்ட பரிசோதனை நிலைகளில் உள்ளன.

இத்தகைய சூழலில், கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு ஊசி தயாரிக்கப்பட்ட பிறகு அதை அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை சா்வதேச அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தடுப்பு ஊசியைத் தயாரிக்கும் நிறுவனத்திடமிருந்து அதை அதிக அளவில் பெற்று அனைத்து நாடுகளுக்கும் விநியோகிக்கும் பணிக்கான தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளதாக யுனிசெஃப் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு ஊசியைக் கொள்முதல் செய்து உலக நாடுகளுக்கு விநியோகிக்கும் பெரும் சவாலை யுனிசெஃப் ஏற்கவுள்ளது. கரோனா நோய்த்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உதவியை யுனிசெஃப் செய்யவுள்ளது. தட்டம்மை, போலியோ உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆண்டுதோறும் 200 கோடி அளவில் தடுப்பு ஊசிகளைக் கொள்முதல் செய்து சுமாா் 100 நாடுகளுக்கு விநியோகிக்கும் பணியை யுனிசெஃப் மேற்கொண்டு வருகிறது. அந்த அனுபவம் கரோனா தொற்றுக்கான தடுப்பு ஊசியை விநியோகிப்பதற்கும் உதவும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்