டெல்லி:
சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலையில் காணப்படும் ஏற்ற, இறக்கங்களை பொறுத்து இந்தியாவில் விலையில் மாற்றம் ஏற்படும்.
இதன்படி மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 62 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப மானியமில்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை புதன்கிழமை நள்ளிரவு முதல் ரூ.62.50 குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.574.50ஆக இருக்கும். இந்த மாதத் தொடக்கத்திலும் எல்பிஜி விலை ரூ.100.50 குறைக்கப்பட்டது.
அதையும் சேர்த்து கணக்கிட்டால், மானியமில்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை மொத்தம் ரூ.163 குறைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளையில், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் விலை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.