சென்னை:
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்து நளினி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2018ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி, தமிழக அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என நளினி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் கொண்ட அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களுக்குப்பின், இந்த மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் நீதிபதிகள் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தனர். இதில், நளினியின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.