நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மேலும் 2 வாரங்களுக்கு அதாவது மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளை நடைமுறைப்படுத்தும் வகையில், பொது இடங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதை தடை செய்யும் ஆணை (144 தடை உத்தரவு) இன்று இரவு 12 மணி முதல் 17-ம் தேதி இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டுள்ளார்.
இந்த தடை உத்தரவை மீறுபவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் ஆணையாளர் எச்சரித்துள்ளார்.