பஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை

பஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை

பஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை விதித்து கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கோவை மண்டலத்துக்குட்பட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளது. இந்த மாவட்டங்களில் மொத்தம் 2,700 பஸ்கள் இயக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் டவுன் பஸ்கள், மற்றும் வெளி மாவட்டம், வெளி மாநிலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 1,190 பஸ்கள் இயக்கப்படுகிறது.

அரசு பஸ்கள் விபத்தில் சிக்காமல் தடுக்க அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மண்டலத்தில் இரவு நேரத்தில் டிரைவர்கள் பஸ்சை இயக்கும்போது விபத்துகள் ஏற்படாமல் தடுக்க கண்டக்டருக்கு முன் பகுதியில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பின் பகுதியில் கண்டக்டர் இருக்கைகள் இருக்கும்.

இந்தநிலையில் அரசு பஸ்களில் பகல் நேரங்களில் டிரைவர்கள் பெண்களை கண்டக்டர் இருக்கை மற்றும் பேனட்டில் அமர அனுமதிப்பதாலும், பெண்களுடன் பேசிக்கொண்டே செல்வதாலும் கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கோவை மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் பணியாற்றும் அரசு பஸ் டிரைவர்கள் முன் இருக்கையில் அமரும் பெண்களிடம் பேசக்கூடாது. மேலும் பேனட்டில் பெண்களை அமர வைக்கக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவையடுத்து அரசு பஸ் டிரைவர்கள் தற்போது பெண்களை பேனட்டில் அமர அனுமதிப்பது இல்லை. மேலும் முன் இருக்கையில் அமரும் பெண்களிடம் பேசுவதும் இல்லை.

இது குறித்து கோவை மண்டல அரசு போக்குவரத்து கழகம் (இயக்குதல்) பொது மேலாளர் மகேந்திரகுமார் கூறியதாவது:

அரசு பஸ்கள் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு பஸ்களை மிதமான வேகத்தில் இயக்க வேண்டும், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். கவனக்குறைவாக வாகனங்களை இயக்கக்கூடாது உள்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறோம். இதுகுறித்து அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.

இந்த நிலையில் பெண்கள் பேனட் மற்றும் முன் இருக்கையில் அமரும்போது அவர்களிடம் சில டிரைவர்கள் பேசிக்கொண்டே செல்கின்றனர். அப்போது கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து கோவை மண்டலத்தில் உள்ள அரசு பஸ் டிரைவர்கள் பேனட்டில் பெண்களை அமர வைக்கக்கூடாது. முன் இருக்கையில் அமரும் பெண்களிடம் பேசக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை டிரைவர்கள் கடைபிடித்து பாதுகாப்பாகவும், முழு கவனத்துடனும் வாகனங்களை இயக்க வேண்டும். இதனால் கவனக்குறைவு காரணமாக ஏற்படும் விபத்துகள் முழுவதுமாக தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்