ரூ.1 லட்சத்துக்கு குழந்தை; 5 பேர் கைது

ரூ.1 லட்சத்துக்கு குழந்தை; 5 பேர் கைது

வாணியம்பாடி:

வாணியம்பாடியில் ரூ.1 லட்சத்துக்கு குழந்தையை விற்பனை செய்த தாய் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி இந்திரா நகர், காமராஜ் தெருவைச் சேர்ந்தவர் சத்யா. இவருக்கு 2 முறை திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வசித்துவந்தார்.

இதனைத்தொடர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் காசநோயால் பாதிக்கப்பட்ட முருகன், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், குடும்பத்தை கவனிக்க முடியாமல் சிரமப்பட்டுவந்துள்ளார்.

இந்நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல், தன்னுடைய குழந்தையை யாருக்காவது கொடுத்துவிடலாம் என சத்யா தன்னுடைய அக்கா மற்றும் பக்கத்துவீட்டு கவிதா என்பவரிடம் தெரிவித்துள்ளார்.அப்போது கவிதாவின் ஏற்பாட்டின் பேரில், பெற்ற குழந்தையை விற்க சத்யா முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து, கர்நாடகாவின் பெங்களூரு ஜெய்நகரைச் சேர்ந்த ரஹ்மத் – ஷகிலா தம்பதிக்கு ரூ.1 லட்சத்துக்கு குழந்தையை விற்பனை செய்துள்ளார். இதற்காக ரூ.65 ஆயிரத்தை அவர் முன்பணமாகப் பெற்றார். பாக்கித் தொகையை இம்மாதம் இறுதிக்குள் அந்த தம்பதி வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து திரும்பிய முருகன், குழந்தையை காணவில்லை என கேட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் குழந்தையை காமாமல்போய்விட்டதாக சத்யா தெரிவித்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில், வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சத்யாவிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் குழந்தையை விற்ற விவரம் தெரியவந்தது.

இதனையடுத்து, கடந்த 24ம் தேதி பெங்களூருவிலிருந்து போலீசார் குழந்தையை மீட்டனர். இது தொடர்பாக சத்யா, சீதா, கவிதா, ரஹ்மத் மற்றும் ஷகிலா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்