ஆய்வுப்பணிகளுக்காக கடலூர் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் எம்.சி.சம்பத் வரவேற்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போது, அதிமுக கட்சி மிகவும் கட்டுக்கோப்புடன் இருந்தது. அமைச்சர்கள் யாரும் தங்கள் தனிப்பட்ட கருத்தை பேசியது கிடையாது, பேசவும் முடியாது. அந்த அளவுக்கு ராணுவக் கட்டுக்கோப்புடன் கட்சியை வழிநடத்திச் சென்றவர் ஜெயலலிதா. அதனால் அவர் மீது அச்சம் கலந்த மரியாதையுடன் அதிமுக நிர்வாகிகள் இருப்பார்கள். எனவே அவர் காரில் செல்லும் போது, குனிந்து கார் டயரை கும்பிடுவது, ஹெலிகாப்டரில் சென்றால் மேலே பார்த்து கும்பிடுவது என தங்கள் மரியாதையை வெளிப்படுத்துவார்கள்அதிமுக நிர்வாகிகளின் இந்த செயல்பாடுகளை எதிர்க்கட்சி உட்பட பலரும் விமர்சித்தனர்.
இந்நிலையில், அப்படி டயரை பார்த்தும் கும்பிடும் கலாசாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் மாநில வளர்ச்சிப் பணிகளின் ஆய்வுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டத்திற்கு சென்ற போது அமைச்சர் எம்.சி.சம்பத் குனிந்து நின்று முதல்வரின் கார் டயரை கும்பிடும் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அமைச்சர்கள் ரொம்ப சுதந்திரமாக கருத்து தெரிவித்தனர். இதுபோன்ற டயர் கலாசாரம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது முதலமைச்சர் பழனிசாமியை, ஜெயலிலதா பாணியில் அமைச்சர் கும்பிடும் போது டயர் கலாசாரம் மீண்டும் தலை தூக்கியுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.