ஒசூர்:
ஓசூர் அருகே நள்ளிரவில் அபாயகரமான ரசாயன அமிலத்தை மர்ம நபர்கள் கொட்டியதால் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி அருகே உள்ள அகரம் முருகன்கோவில் அருகே துர்நாற்றம் வீசும் அபாயகரமான ரசாயன அமிலக்கழிவு ஆயிரக்கணக்கான லிட்டர் கணக்கில் கொட்டப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியினரை அச்சமடைய வைத்துள்ளது.
ஓசூரில் உள்ள தனியார் நிறுவனங்கள் ஆபத்தான அமிலக்கழிவுகளை ஓசூர் – தருமபுரி மாநில நெடுஞ்சாலை அகரம் முருகன் கோவில் நீர்நிலை மற்றும் திறந்தவெளி பகுதிகளில் அவ்வபோது கொட்டி சென்றுவிடுகின்றனர்.
அவ்வாறு அந்த அமிலம் கலந்து புள், மற்றும் நீரை குடித்து கால்நடைகள் உயிரிழந்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கும் நிலையில், நேற்று நள்ளிரவில் அபாயகரமான அமிலக்கழிவினை அகரம் முருகன்கோவில் அருகில் நீரோடையில் சுமார் 20 ஆயிரம் லிட்டர் களை கொட்டி சென்றுள்ளனர்.
உருளைகளில் கொண்டுவந்துள்ள இந்த அமிலக்கழிவுகள், பொதுமக்கள் வரத்தொடங்கியபோது ஒரு உருளையை மட்டும் விட்டு தப்பி உள்ளனர்.
ஓசூர் பகுதியில் தற்போது மழை பெய்வதற்கான வானிலை உள்ளதால் அவ்வாறு மழை பெய்தால் நீரோடையில் உள்ள அமிலக்கழிவு ஏரி, குளம் உள்ளிட்டவைகளில் கலக்கும் அபாயம் இருப்பதால் உடனடியாக அவற்றை அகற்றி, உரிய நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர், வன ஊழியர்கள் அமிலக்கழிவினை, கழிவுநீர் வாகனங்கள் மூலம் உறிஞ்சி மனிதர்கள் நடமாட்டமில்லாத பகுதியில் விட்டுசெல்லும் பணியை மேற்க்கொண்டு வருகின்றனர்.