`5 ரூபாய் போட்டால் முகக்கவசம்!’ – ராணிப்பேட்டையில் விரிவுபடுத்தப்படும் தானியங்கி இயந்திர வசதி

`5 ரூபாய் போட்டால் முகக்கவசம்!’ – ராணிப்பேட்டையில் விரிவுபடுத்தப்படும் தானியங்கி இயந்திர வசதி

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்களின் தற்காப்புக்காக 5 ரூபாய் நாணயம் போட்டு முகக்கவசம் பெறும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. கலெக்டர் திவ்யதர்ஷினி 5 ரூபாய் நாணயத்தை இயந்திரத்தில் செலுத்தி முகக்கவசத்தைப் பெற்று தொடங்கி வைத்தார். ராணிப்பேட்டை மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கம் சார்பில் இந்தத் தானியங்கி இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் பெறும் தானியங்கி இயந்திரம்
5 ரூபாய் நாணயம் அல்லது 5 ஒரு ரூபாய் நாணயங்களைப் போட்டால் அடுத்த நொடியே முகக்கவசம் கைக்கு வரும்.முகக் கவசத்தின் தட்டுப்பாட்டைப் போக்கவும் குறைந்த விலையில் வழங்கவும் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் இந்தத் தானியங்கி இயந்திர வசதி விரிவுபடுத்தப்படுகிறது.

இதைப்பயன்படுத்தி ஏழை, எளிய மக்கள் தரமான முகக்கவசம் பெற்றுக்கொள்ளலாம் என்று ராணிப்பேட்டை கலெக்டர் தெரிவித்துள்ளார். முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் அறிமுக நாளிலேயே பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் தானியங்கி இயந்திரத்தின் மதிப்பு ரூ.20,000 என்று அதை உருவாக்கித் தந்த தொழில்நுட்ப குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முகக்கவசம் பெறும் தானியங்கி இயந்திரம்
இதைத்தொடர்ந்து, தானியங்கி கைகழுவும் லோஷன் தெளிக்கும் இயந்திரம் மற்றும் கிருமிநாசினி தெளிப்பு இயந்திரத்தையும் வடிவமைத்துத் தர உள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், கலெக்டர் அலுவலக மேலாளர் பாபு உள்படப் பலர் கலந்துகொண்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்