அமெரிக்கா:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
முதல் நாளான 29.08.19 அன்று, சுகாதாரத்துறை தொடர்பான மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 1-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
அங்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, முதலீட்டுத் தூதுவர்களை உருவாக்கி “யாதும் ஊரே” திட்டத்தை முதல்வர் நியூயார்க்கில் தொடங்கிவைத்தார்.
இந்த கூட்டத்தில் கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்த தமிழ் அமைப்புகள் பங்கேற்றன.
அதில், 250-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வானூர்தி ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்ய தமிழ்நாடு உகந்த மாநிலமாக திகழ்வதாகக் கூறினார்.
இதில், லிங்கன் எலெக்ட்ரிக், பாக்ஸ்கான் உள்ளிட்ட 19 நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சுமார் 2300 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.