இரவு 8 மணிக்கு தூங்கி காலை 4மணிக்கு எழுவேன்

  • In Cinema
  • June 27, 2020
  • 352 Views
இரவு 8 மணிக்கு தூங்கி காலை 4மணிக்கு எழுவேன்

ஆடுகளம், கபாலி உட்பட பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கும் கிஷோர், கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் புகழ்பெற்ற நடிகர். ஊரடங்கு காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் வீட்டில் முடங்கியுள்ளனர். ஆனால், கையில் மண்வெட்டியுடன் விவசாய வேலைகளில் முனைப்பாக இருக்கும் நடிகர் கிஷோர், அது பற்றி: இயற்கை விவசாயத்தின் மீது அதீத ஆர்வம் கொண்டவன் நான். நடிப்புக்கு இடையே மனைவி விஷாலாவுடன் இணைந்து, இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். ஊரடங்கு அறிவிக்கப்பட்டப்போது, ஐதராபாத்தில் ஷூட்டிங்ல இருந்தேன். பிறகு, பெங்களூரு வந்தேன். அங்கே எங்களுடைய இயற்கை அங்காடி இருக்கும், மற்றொரு வீட்டில், 15 நாட்கள் என்னைத் தனிமைப்படுத்திக்கிட்டேன்எந்தப் பிரச்னையும் இல்லைன்னு உறுதியான பிறகு, கரியப்பனத்தொட்டி பண்ணை வீட்டுக்கு வந்தேன். தொடர்ந்து ஒன்றரை மாசத்துக்கும் மேல் இங்கே தான் இருக்கேன்.இங்கே தினமும் தோட்ட வேலைகள் செய்றேன். குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடறேன். இது என் வாழ்க்கையில், ரொம்பவே சிறப்பான காலம்.

நாங்க வசிக்கும் கிராமத்துல, வீடுகள் குறைவு. அதுவும் இடைவெளி விட்டுத் தான் இருக்கும். எனவே, கொரோனா தொற்று குறித்து, பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், கவனமா இருக்கோம்.

ஆரோக்கியமான வாழ்வியல் மற்றும் உணவு முறைகளை, இப்போ சரியா கடைப்பிடிக்க முடியுது.ஒன்றரை வருஷமா, ரெண்டு வேளை மட்டும் தான் சாப்பிடுறோம். காலையில், 11:௦௦ மணிக்கு, எளிமையான முறையில் இட்லி, தோசை, பழைய சோறு கரைசல்னு ஏதாவதொரு உணவைச் சாப்பிடுவோம். இங்கே நாட்டுக்கோழி முட்டைகள் அதிகம் கிடைக்குது. அதையும் உணவில் சேர்த்துப்போம்.

இரவுக்கு ராகிக் களிதான் சாப்பிடுறோம். கீரையுடன் பருப்பு சேர்த்து வேகவெச்சு, அந்தத் தண்ணியை எடுத்துத் தயார் செய்த களியுடன் சேர்த்து கரைச்சுக்கணும். அதனுடன் கொஞ்சம் நெய், காரத்துக்கு, அரைத்த மிளகாய், உப்பு கொஞ்சம் சேர்த்துக்கணும். தண்ணி எடுக்கப்பட்ட கீரைப் பருப்புக் கடைசலைத் துவையல் மாதிரி செய்து, களிக் கரைசலுக்குத் தொட்டுக்கணும்.

ரொம்பவே சுவையான இந்த, ‘டிஷ்’தான் எங்க தினசரி இரவு டின்னர். பிறகு, 8:௦௦ — 9:௦௦ மணிக்குள் துாங்கிடுவோம்.எங்க சுற்று வட்டாரத்துல, கோழி, மாடுகள் வளர்ப்போர் அதிகம். அவை அதிகாலையில் சத்தம் போட ஆரம்பிச்சுடும். அந்த இயற்கையான அலாரச் சத்தத்துல, விடியற்காலை, 4:௦௦ மணிக்கெல்லாம் எழுந்திடுவோம். உடனே தோட்ட வேலைகளைக் கவனிக்க ஆரம்பிச்சுடுவோம்!

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்