சென்னை:
உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது.
கடலூர் மாவட்டம் பன்ருட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை ரூ.50 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் என ஏலம் விடப்பட்டது. இந்த செய்தி ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், சட்டத்திற்கும், மக்களாட்சி தத்துவத்திற்கும் புறம்பாக நடைபெறும் இத்தகைய செயல்கள் வருந்தத்தக்கவை. ஜனநாயகத்திற்கு ஊறுவிளைவிப்பதை தடுக்க தேர்தல் அலுவலர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.