ராஜஸ்தானில் ஆட்சிக்கெதிராக கலகம் செய்த துணை முதல்வரான சச்சின் பைலட் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது ஆதரவு இரண்டு அமைச்சர்களும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் என்ற பதவியும் பறிக்கப்பட்டது.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் முதல்வராகவும் சச்சின் பைலட் துணை முதல்வராகவும் பதவி வகித்து வந்த நிலையில், தனக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தினார் சச்சின் பைலட்.
மேலும் தனது ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் அதிக இடங்கள் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
ஆட்சிக்கு குறைந்தபட்சம் 101 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் சுமார் 103 எம்எல்ஏக்கள் ஆதரவு அசோக் கெலாட் அரசுக்கு இருப்பது இன்றைய சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தைரியமாக அசோக் கெலாட் இரண்டு முடிவுகளை எடுத்துள்ளார்.
இரு அமைச்சர்கள்
அதில் ஒரு முடிவு சச்சின் பைலட்டை துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவது, மற்றொரு முடிவு அவரது ஆதரவாளர்களான இரு அமைச்சர்களான ரமேஷ் மீனா மற்றும் விஸ்வேஸ்வர சிங் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மற்றொரு பக்கம், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் என்ற பதவியை காங்கிரஸ் மேலிடம் தூக்கிவிட்டது.
துணை முதல்வர்
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட சச்சின் பைலட்டுக்கு, இப்பொழுது துணை முதல்வர் பதவியும் போய்விட்டது. அடுத்ததாக, அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானம் முன்மொழியப்படும் என்று கூறப்படுகிறது. முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் குழுக் கூட்டத்தில் இது போன்ற ஒரு தீர்மானத்தை நகர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சச்சின் பைலட் கலக்கம்
ஒரு பக்கம் பாஜக சச்சின் பைலட்டை நாடவில்லை. இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியும் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கி உள்ளது. எனவே கலகத்தில் ஈடுபட்ட சச்சின் பைலட் இப்போது பெரும் கலக்கத்தில் இருக்கிறார்.