ஐதராபாத்:
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுக்கள் அச்சடிப்பதை நிறுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக பழை ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து, ரூ.2000 மற்றும் ரூ.500 புதிய நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் இருந்து வரும் ரூ.2000 நோட்டுக்களின் புழக்கம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
2017-18ம் நிதியாண்டில் 6,72,600 கோடி அளவுக்கு இருந்த இதன் எண்ணிக்கை, 2018-19ம் ஆண்டில் 6,58,200 ஆக குறைந்து, சுமார் 14,400 கோடி அளவுக்கு எண்ணிக்கை குறைந்துள்ளது.
மேலும், ரூ.500 நோட்டுக்களின் மதிப்பு 2018ம் நிதியாண்டில் 37 சதவீதத்திலிருந்து 2019ம் நிதியாண்டில் 39 சதவீதமாக அதிகரித்தது.
இதனால், நடப்பு நிதியாண்டில் ரூ.2000 நோட்டுக்களை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.