தேனியில் காங்கிரஸ் தலைவர் கைது

தேனியில் காங்கிரஸ் தலைவர் கைது

தேனியில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான இளைஞர் காங்கிரஸ் சார்பில் தேனி- போடி சாலையில் கண்டன பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், கண்டன பேரணியை தடுக்க திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, தேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், மத்திய பா.ஜ.க. அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று காலை 10 மணியளவில் தேனி – போடி சாலையில் நடைபெறவுள்ள விவசாயிகள் கூட்டத்திற்கு வருகிற காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கொடியுள்ள வாகனங்கள் வருவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. டிராக்டர்களிலும் விவசாயிகள் வர முடியவில்லை. விவசாயிகள் கூட்டத்தை நடைபெறாமல் தடுப்பதற்கு காவல்துறையினர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய ஜனநாயக சட்டவிரோத செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன். இன்று நடைபெறவுள்ள விவசாயிகள் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி கூட்டத்தை நடத்தவேண்டிய நிலை ஏற்படும் என்று காவல்துறையினரை எச்சரிக்கிறேன்.

எனவே, மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் அமைதியான முறையில் சட்ட ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நடத்துகிற விவசாயிகள் கூட்டத்திற்கு அனுமதி அளிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தும்படி தமிழக தலைமை காவல்துறை அதிகாரி திரு ஜே.கே.திரிபாதி அவர்களையும், தமிழக உள்த்துறை செயலாளர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்